சில மாதங்களுக்கு முன்னர் ஒரு பெண்மணி டெலி·போன் செய்தார்கள்.
கேள்வி: "பிரம்மி என்றால் என்ன?"
நான் முதலில் பிரமிட் பற்றித்தான் அந்தப் பெண்
கேட்கிறதோ என்று எண்ணினேன். அந்தச் சொல்லை எழுத்துக் கூட்டிய போதுகூட சரியாக மட்டுப்படவில்லை.
பின்னர்தான் புலப்பட்டது.
'ப்ராமி'
"அது ஒரு சாமி", என்றேன்.
"சாமியா! ஜின்கோ பிலோபான்னாங்களே?"
அப்போதுதான் பொறிதட்டியது.
"ப்ராமி என்பது வல்லாரை. இது ஒரு செடி - கீரை. ஜின்கோ பிலோபா(Gingko Biloba) ஒரு மரம். ஜப்பானைச் சேர்ந்தது. அது வேறு".
"அப்பொ இது?"
"வேரு."
" ???"
"அதாவது வேரு. வேரிலயே தண்டு. தண்டுலயே இலை. எல்லாத்தையும் சேர்த்துச் சாப்பிடவேண்டும். இதை 'சமூலம்' என்று சொல்வார்கள்".
"அப்போ அமலாங்கறது? நெல்லிக்காயா?"
"ஆமாம். 'ஆமலகா' என்பதைத்தான் 'அமலா' என்று சொல்வார்கள்."
அமலா என்னும் நடிகை ஒரு காலத்தில் இருக்கப்பட்டது. ஏதோ ஒரு படத்தில்கூட அனார்கலி வேஷத்தில் அழகாக வந்து 'வா வெண்ணிலா' என்ற ஒரு அருமையான பாட்டைப் பாடும்.
அந்த அமலாவெல்லாம் மறக்கப்பட்டாச்சு.
"மூளைக்கு நல்லதுங்கறாங்களே?"
"வல்லாரைக் கீரை ரொம்பவும் நல்லது. அதில் வாலரின் என்னும் கெமிக்கல் இருக்கிறது. அது மூளையின் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன் குறிப்பாக ஞாபக சக்தி இருக்கும் இடமாகிய மெமொரி கார்ட்டெக்ஸைத் தூண்டிவிடுகிறது.
ஜின்கோ பிலோபா மூளை, கால்கள், இடுப்பின் உட்புறம் ஆகிய இடங்களில் உள்ள ரத்தக்குழாய்களை விரிவடையச் செய்யும். கோவார்க்டேஷன் எனப்படும் கண்டிஷனுக்கு இதைக் கொடுப்பார்கள். ஸ்ட்ரோக் கேஸ்களுக்குக் கூட கொடுக்கப்படுகிறது."
'ப்ராமி' எனப்படும் தெய்வம் பிரம்மசக்தி. இந்த தேவி சப்தமாத்ரிகைகளில் ஒருத்தி. சரஸ்வதிக்கும் ப்ராமி என்ற பெயருண்டு. அவளும் பிரம்ம சக்திதானே. சரஸ்வதியைப் போல மூளையைத் தூண்டிவிடுவதால் புத்தியை தீட்சண்யாக - கூர்மையாக ஆக்குவதால் வல்லாரைக்கு ப்ராமி என்ற பெயரைக் கொடுத்துள்ளார்கள்.
பல மூலிகைகளுக்குக் குழூஉக்குறியாக விளங்கும் பெயர்கள் உண்டு. மாமரத்தை 'லக்ஷ்மி' என்பார்கள். ஏனென்றால் 'மா' என்பது லட்சுமியைக் குறிப்பது. 'காட்டுக் குதிரை' என்றும் சொல்வதுண்டு. 'மா' என்பது குதிரையையும் குறிக்கிறதல்லவா. சுக்கு என்பதை சுப்பிரமணியர் என்பார்கள்.
ப்ராமி -சரஸ்வதிக்கு என்று ஒரு மூலிகை.
பிரம்மாவுக்கும் உரிய மூலிகை ஒன்று உண்டு.
அதன் பெயர் 'ப்ரம்ம பத்ரம்'.
ஒரு ஹிண்ட்ட் தருகிறேன்.
நாலெழுத்துப் பூடு, நடுவே நரம்பிருக்கும்
காலுந் தலையுங் கடைச்சாதி - மேலாக
ஒட்டு முதலெழுத்து மோதுமூன்றாமெழுத்தும்
விட்டாற் பரமனுக்கு வீடு
இந்த விடுகவிக்குப் பதில்:
'புகையிலை'
நாலெழுத்துக்களால் ஆகிய பெயர் - புகையிலை.
அதன் இலையில் நடுவில் கனமான நரம்பிருக்கும்.
தலையும் காலும் கடைச் சாதி - முதலெழுத்து 'பு'. கடைசியெழுத்து 'லை'. 'புலை' எனப்படும் சாதி. ஒரு காலத்தில் அது கடை-கீழ் சாதியாகக் கருதப்பட்டது.
ஒட்டும் முதல் எழுத்து - 'பு'
ஓதும் மூன்றாம் எழுத்து - 'யி'
'புகையிலை' என்பதில் அவற்றை நீக்கிவிட்டால் எஞ்சியவை இரண்டாம் எழுதாகிய 'கை'யும் நான்காம் எழுத்தாகிய 'லை'
'கைலை' என்பது பரமனுக்கு வீடாகிய திருக்கையிலை ஆகும்.
புகையிலைதான் பிரம்மபத்ரம்.
புகையிலை இந்தியாவுக்கு பதினாறாம் நூற்றாண்டில்தான் வந்தது.
அது அமெரிக்காவின் தேசிய தாவரங்களில் ஒன்று.
அமெரிந்தியர்கள் புகை பிடிப்பது உண்டு. சமாதானத்தின் சின்னமாக புகைப்பது விளங்கியது.
'Smoking Peace Pipe' என்று சொல்லப்படும் சமாதானச் சடங்கின் முக்கிய அம்சம் புகையிலை பிடிப்பது.
அமெரிந்தியர்கள் இதனை எப்போது புகைக்கத் துவங்கினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் அது அவர்களின் வழிபாடாகிய மாந்திரீகக் கோட்பாட்டில்
(Shamanism) அடங்கியிருந்தது.
புகையிலை ஒரு மூலிகையாகவும் சாந்தி, அமைதி ஆகியவற்றைக் குறிப்பதாகவும் கருதப்பட்டது. இரவு நேரத்தில் அமெரிந்தியர்கள் தத்தமது விக்வாம் கூடாரங்களின் வெளியில் இருக்கும் இடத்தில் நெருப்பு மூட்டிக் கனப்பு ஏற்படுத்திக் கொண்டு, அமைதியாகப் புகை பிடிப்பதுண்டு.
எதிரிகளாக விளங்கிய இரண்டு தரப்பினர், சந்து செய்துகொள்ளும்போது, சமாதானத்தைக் குறிக்கும் சடங்காக புகைப்பார்கள்.
இதனை
'Smoking the Peace Pipe' என்று சொல்வார்கள்.
போர்த்துகீசியாரால் முதன்முதலில் அது அறிமுகம் ஆகியது.
ஆச்சரியமாகத்தான் இருக்கிறது! சில விஷயங்கள் குறுகிய காலகட்டதிலேயே உலகெங்கும் பரவி விடுகின்றன.
அவற்றில் புகையிலையும் ஒன்று.
ஸ்பானியர் மூலமாகவே அமெரிக்காவிலிருந்து அது
ஐரோப்பாவுக்கு வந்திருக்கிறது. இங்கிலாந்தில் அது அறிமுகமானது,
ராணி எலிசபெத் காலத்தில்தான். வர்ஜீனியாப் பிரதேசத்தை இங்கிலாந்துக்காக பிடித்துக்கொண்ட ஸர் வால்ட்டர் ராலிதான் அதனை இங்கிலாந்தில் பிரபலப்படுத்தினார்.
முதன்முதலாக அவர், ராணி எலிசபெத் நடத்திய அரசவைப் பார்ட்டிக்கு ஒரு பைப்பில் புகையிலையை வைத்துப் புகை பிடித்த வண்ணம் சென்றார். அதைக் கண்ட பிரபு ஒருவர்,
"By Gad! Sir Walter is on fire!" என்று கூவியவண்ணம் அருகிலிருந்த போத்தல் பீரை எடுத்து அவர் முகத்தில் 'சளக்'கென்று ஊற்றினார்.
இப்படித்தான் புகையிலை ஓஹோவென்று அறிமுகமாயிற்று.
அதன்பின்னர் பு¨கைலை, உயர்குடிமக்களின் பிரத்தியேக போகப்பொருளாக மாறியது.
இந்தியாவுக்கு வந்த பிறகே அதற்கென ஒரு புராணக்கதையை உருவாக்கி, அதற்கு பிரம்மபத்ரம் என்ற பெயரையும் கொடுத்திருக்கிறார்கள்.
அதன் சுருக்கம்:
ஒருமுறை மும்மூர்த்திகளுக்குளே ஒரு வழக்கு உண்டாயிற்று. அதனைத் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு அவர்கள் தேவர்கள் கூடியுள்ள சபைக்குச் சென்று தம் வழக்கை எடுத்துரைத்தனர். தேவர்கள் அவற்றைக் கேட்டபின்னர், "உங்கள் வியவகாரத்தைப் பிறகு வைத்துக்கொள்வோம்", என்று சொல்லி அம்மூவர்களிடத்தும் வில்வம், திருத்துழாய், புகையிலை என்னும் இவற்றைக் கொடுத்து இவற்றை மறுநாள் கொண்டுவரச் சொல்லியனுப்பினர்.
அவர்கள் மூவருமே அங்ஙனமே சென்றனர். சிவபெருமான்பால் கொடுத்த பத்திரமாகிய வில்வத்தைக் கங்கை கொண்டு போயிற்று. திருமாலிடம் கொடுத்த திருத்துழாயை பாற்கடலிலுள்ள அலை கொண்டு போயிற்று. பிரம்ம தேவர் தாம் பெற்ற
புகையிலையைத் தம் நாவிலுள்ள சரஸ்வதியிடம் கொடுத்து வைத்திருந்தார்.
மறுநாள் மூவரும் விண்ணவர் சபைக்கு வந்தபோது தேவர்கள்," முன்னே நாம் கொடுத்த பத்திரங்களைக் கொடுங்கள்", என்றனர். சிவனும் திருமாலும் விழித்தனர்; "எங்கள் பத்திரங்கள் போயின", என்றனர். அதுகண்டு மகிழ்ச்சியுற்ற பிரம்ம தேவர்
கலைமகளிடமிருந்து புகையிலையை வாங்கி, "இதோ, எனக்கு அளித்த பத்திரம்", என்று முன்வைத்து, "மற்றவர்கள் பத்திரங்கள் போயின; என்னுடையது போகயிலை", என்று கூறினார். அவர் கூற்றில் புகையிலை என்பதன் மரூஉவாகிய போகயிலை யென்னும் பெயர்
தோன்றியது; பிரம்மதேவரிடமிருந்து நழுவாமல் அவருக்கு உரியதானமையின் அதனைப் 'பிரம்ம பத்திரம்' என்று யாவரும் அன்று முதல் வழங்கலாயினர்.
புகையிலையைப் பற்றி தமிழ்நாட்டில் பலவிதமான புனைகதைகள் நிலவுகின்றன. அவற்றில் இதும் ஒன்று.
இந்தக் கதை 'புகையிலை விடு தூது' என்னும் சிறுநூலில் காணப்படுவது.
இன்னொரு கதையும் உண்டு.......
ஒவ்வொரு தெய்வத்துக்கும் உரிய மலர், இலை போன்றவை இருக்கின்றன. ஆகமநூல்களில் இவையெல்லாம் விலாவரியாகச் சொல்லப்பட்டிருக்கும். சிவனுக்கு வில்வ இலை, விஷ்ணுவுக்கு துளசி, விநாயகருக்கு அறுகு, வன்னி என்றெல்லாம் இருக்கும்.
விஷ்ணுவுக்குத் துளசியும் சிவனுக்கு வில்வமும் இருப்பதுபோல் பிரம்மாவுக்கு இலையொன்றும் இல்லாமலிருந்தது.
இதைப் பற்றி தேவி சரஸ்வதி மிகவும் சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். அந்த தேவியாரின் சிந்தனையின் தீட்சண்யம் அனல் வீசத ்தொடங்கியது. அது புகையுருவாக எழும்பியது.
அருகிலிருந்த பிரம்ம தேவர் அதைப் பார்த்துவிட்டார். ஞானதிருஷ்டியால் அந்தப் புகையின் காரணத்தை அறிந்து கொண்டார்.
உடனடியாக அந்தப் புகையை இலை உருவாகச் சிருஷ்டித்தார்.
அப்படி ஏற்பட்டதுதான் புகையிலை.
இப்படியாக அந்த நியோ-புராணம்
(Neo-Purana) சொல்கிறது.
சரஸ்வதியின் தீவிரமான சிந்தனையிலிருந்து தோன்றியதால் அந்த இலைக்கு சிந்தனையைத் தூண்டும் சக்தி இருந்தது.
எந்த வகையில் புகையிலையைப் பயன்படுத்தினாலும் சிந்தனையைத் தூண்டும்; அதற்கேற்ற வகையில் மனதை ஒருமைப்படுத்தும்; அமைதிப் படுத்தும்.
இந்த மாதிரியான நியோ புராணங்கள் ஏராளமான இருக்கின்றன. ஒரிஜினல் புராணங்கள் பதினெட்டு என்றால் உபபுராணங்கள் இன்னொரு பதினெட்டு இருக்கின்றன. மேலும் குட்டி குட்டி புராணங்களும் உள்ளன. இவை தவிர ஆயிரக்கணக்கில் ஸ்தல புராணங்கள் இருக்கின்றன.
கட்டபொம்மனுக்குக் கூட புரணம் இருக்கிறது.
அப்புறம் புகையிலையைப் பற்றி கேட்கவா வேண்டும்.
தமிழில் தொண்ணூற்றாறு பிரபந்தவகைகள் உண்டு. அவற்றில் தூது இலக்கியங்கள் அடங்கும். விறலிவிடு தூது, மேகம்விடு தூது, வண்டுவிடு தூது, அன்னம்விடு தூது என்று விதம்விதமாக இருக்கின்றன. தமிழ்விடுதூது என்றொரு நூல்கூட இருக்கிறது.
பிற்காலப் புலவர்களுக்கு உறுதுணையாக விளங்கும் புகையிலையை அவர்கள் விடுவார்களா, என்ன?
புகையிலை விடு தூது என்னும் நூலையும் ஒரு புலவர் இயற்றியிருக்கிறார்.
அதிசயமனிதர், புத்தக வித்தகர் ரோஜா முத்தையா எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்த புத்தகங்கள் வராஹி மாலை, யோக வாசிட்டம், ஞான வாசிட்டம், புகையிலை விடுதூது ஆகியவை.
புகையிலையைப் புகைத்ததால்தான் அதற்குப் புகையிலை என்று பெயர் ஏற்பட்டது.
பைப்பில் வைத்துப் புகைக்காமல் நேரடியாகப் புகைக்கும் வகையில் கைக்கு அடக்கமாகச் செய்துகொண்டார்கள். 'சீகார்' என்னும் பெயரில் விளங்கிய இதுவும்கூட பெரிய இடத்து சமாசாரமாகத்தான் விளங்கியது.
பிரிட்டிஷ் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சிலும் அவரிடம் எப்போதும் புகைந்துகொண்டிருக்கும் சீகாரும் மிகவும் பிரபலமாக விளங்கியதும் ஒருகாலம்.
அவருக்கு அந்த சீகாரையும் சுருட்டையும் உறையூரில் செய்துதான் அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.
துருக்கியர்களின் ஆட்டோமானியப் பேரரசைச் சேர்ந்த படையினர், காகிதத்தில் புகையிலைத் தூளைச் சுருட்டி புகைப்பதைக் கண்டுபிடித்ததாகச் சொல்லப்படுகிறது. அவ்வாறு தோன்றியதுதான் சிகரெட் என்பார்கள்.
ஐரோப்பாவில் முதன்முதலில் சிகரெட் பிரெஞ்சுப் பெண்களால் புகைக்கப்பட்டது. அவர்களைப் பார்த்து அமெரிக்கப் பெண்களும் சிகரெட்டைப் பிடிக்க ஆரம்பித்தனர். சீகார் ஆண்களுக்கும் சிகரெட் பெண்களுக்கும் உரியதாகியது. உலகின் பல பாகங்களிலும் பயிரிடப்பட்ட புகையிலை ஆங்காங்கு ஒவ்வொரு விதமாகப் புகைக்கப்பட்டது.
இந்தியாவில் இலையில் வைத்துச் சுருட்டப்பட்டு 'பீடி' என்ற பெயரில் புகைக்கப்பட்டது.
தென்கிழக்காசியாவில் ஒருவகைச் செடியின் தண்டில் இருக்கும் தாளை உரித்தெடுத்து அதில் புகையிலையை அவ்வப்போது வைத்துச் சுருட்டிப் புகைப்பார்கள். இதனை
'Rokok' என்று அழைப்பார்கள். மலேசியத் தமிழர்கள் 'ரோக்கு' என்று சொல்வார்கள். இப்போது மலாய்மொழியில் சிகரெட், சுருட்டு போன்ற அனைத்துமே
'Rokok என்ற பெயரில்தான் அழைக்கப்படுகின்றன. 'புகைப்பது' என்னும் வினைச்சொல்கூட
'merokok' தமிழகத்தில் புகைப்பது ஒரு சிறந்த செயலாகக் கருதப் படவில்லை. ஆங்கிலேயர்கள் காலத்தில் உறையூரில் சுருட்டு செய்யும் தொழிலை மையப்பட்டது.
உறையூர் சுருட்டுகள் புகழ்பெற்றவை.
உலகப் புகழ் பெற்ற உறையூர் சுருட்டுக்கூட தமிழர்களிடம் பரவவில்லை. சிறிய எண்ணிக்கை கொண்ட வயசாளிகள் மட்டுமே சுருட்டுப் பிடித்தனர். சுருட்டுக்கு ஒரு stigma ஏற்பட்டுவிட்டது. 'கிராமத்துப் பெரிசு'களின் அடையாளமாகிப் போனது.
சிந்தனை, மன அமைதிக்காக மட்டும் சுருட்டு வகையறா பயன்படவில்லை. பலருக்கு இயற்கையின் அழைப்பு எனப்படும் இரண்டுக்குப் போவதற்கு சுருட்டு மிகவும் உறுதுணையாக இருந்தது. சுருட்டு பிடிக்கவில்லை என்றால் மலச்சிக்கல் ஏற்பட்டக்கூடியவர்கள் இருந்தார்கள்.
மதுரையில் பெரிய தத்துவஞானி ஒருவர் தையல் தொழிலைச் செய்துவந்தார். அவர் கவிஞரும்கூட.
அவர் பாடிய கவிதை ஒன்று இருந்தது.
'சிந்தனைக்கு முந்திவரும்
எந்தன் சுருட்டு....'
என்று ஆரம்பிக்கும், அந்தக் கவிதை.
தமிழர்களிடம் புகையிலையைப் பற்றி சில
bias, prejudice, and preference என்று அடுக்குவார்களே அது ஏற்பட்டது.
புகையிலையைப் புகைப்பதை விட, அதை வாயில் போட்டு ஊற வைத்துக் கொள்வதையும், பொடியாக நாசித்துவாரங்களில் உரிஞ்சிக் கொள்வதையுமே தமிழர்கள் பெரிதும் விரும்பினார்கள்.
வாயில் போடப்படும் புகையிலை, அங்குள்ள உமிழ்நீரில் ஊறும். அவ்வாறு ஊறும்போது, அதில் உள்ள தாதுப்பொருள்கள் உமிழ்நீரில் கரையும்.
அந்தத் தாதுப்பொருட்களில்
nicotine, tannin போன்றவை இருக்கும். புகையிலையை ஐரோப்பாவில் பயிர்செய்யும் வழக்கத்தைத் தோற்றுவைத்டவர், ழ்ஷான் நிக்கோட் என்னும் பிரெஞ்சுத் தூதுவர். அவருடைய பெயரையே புகையிலையில் உள்ள முக்கியமான ரசாயனப்பொருளுக்குப் பெயர் வைத்துவிட்டார்கள். புகையிலைப்
புகையில்
4000 ரசாயனப்பொருட்கள் இருக்கின்றன. அவற்றில் பெரும்பான்மையானவை விஷத்தன்மை கொண்டவை.
வாயில் உள்ள
mucous membrane மூலம் புகையிலைச் சாற்றில் உள்ள ரசாயனப்பொருள் உட்செல்கிறது. அது ஒரு வகையான போதையைத் தரும். புகையிலைச் சாற்றை விழுங்கிவிடக்கூடாது. மயக்கம் வரும்.
அதுகாறும் 'வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு' என்ற காம்பினேஷன் மட்டுமே தமிழர்களிடையே இருந்தது. இந்த வரிசையில்தான் அவற்றைக் குறிப்பிடுவார்கள். ஆனால், 'சுண்ணாம்பு' என்ற சொல்லை உச்சரிப்பதைத் தவிர்த்தார்கள். ஏனெனில் சுண்ணாம்பில் உள்ள முதல் இரண்டு எழுத்துக்களும், பெயர் சொல்லப்படக்கூடாததொரு மூன்றெழுத்து அவயவத்தைக் குறிக்கும் என்று கருதினார்கள். ரொம்பவும்
puritanistic-காக
இருந்திருப்பார்கள் போலிருக்கிறது. ஆகவே சுண்ணாம்பை அந்தக் காலத்தில் இருந்த மரியாதைப்பட்ட பெரிய மனிதர்கள், 'மூன்றாவது' என்றுதான் சொல்வார்கள். 'இடக்கர் அடக்கல்' என்னும் அணியைச் சேர்ந்தது இந்த வழக்கு.
புகையிலை அந்த வரிசையில் இடம் பிடித்துக் கொண்டு விட்டது. 'வெற்றிலை பாக்குச் சுண்ணாம்பு' என்ற அடுக்குத்தொடர் மாறி 'வெற்றிலை பாக்குப் போயிலை' என்று ஆகியது. 'வெத்திலை பாக்கு சுண்ணாம்பு, பத்திரி ஏலம் கிராம்பு' என்றொரு பாட்டு
இருக்கிறதே, தெரியுமா?
ஆயுர்வேத மருத்துவமுறையில் 'ஔஷதப் பிரயோகம்' என்ற பதத்தைக் காணலாம். ஒன்றுமில்லை, மருந்துகளை எப்படி எப்படிக் கொடுக்கலாம் என்ற துறை இது.
Drug administration என்று இப்போது சொல்கிறோம் அல்லவா. வாய் மூலமாகச் செலுத்துவது, தைலமாகத் தடவுவது, ஊசிமூலம் குத்துவது போன்ற சிலமுறைகள் இருந்தன. அவற்றில் ஒன்று மருந்துப்பொடியை மூக்குத் துவாரத்தின் மூலம் உள் உரிஞ்சி இழுத்தல். மூக்கினுள் இருக்கும்
mucous membrane மூலம் அந்த மருந்து உடலில் கலந்துவிடும்.
இதனை 'நாசிகா சூர்ணம்' என்று ஆயுர்வேதம் கூறும்.
பயப்படவேண்டாம் - 'மூக்குப்பொடி' அல்லது 'மூக்குத்தூள்'.
பின்னர் புகையிலையை இடித்துப் பொடி செய்துப் பயன்படுத்தினர்.
புறங்கையைப் பாருங்கள்.பெருவிரலை நன்றாகப் பின்புறமாக வில்லாக வளைத்துக்கொள்ளுங்கள். இப்போது மணிக்கட்டின் பக்கவாட்டில் இரண்டு நாண்நரம்புகள் விடைத்துக்கொண்டு தெரியும்.
Abductor Policis Major, Extensor Policis Major ஆகிய இரண்டு தசைகளின் நாண்கள் அவை. அவையாகத்தான் இருக்கவேண்டும். நாற்பத்தேழாண்டுகளுக்கு முன்னர் அனாட்டமி படித்தது.
அவை இரண்டுக்கும் நடுவே ஒரு குழி விழும்.
அதன் பெயர்
'Anatomical Snuff Box'. காரணமாகத்தான் அப்பெயர் ஏற்பட்டது.
அந்தக் குழியில் புகையிலைப் பொடியை வைத்துக்கொண்டு, நாசித்துவாரத்தில் வைத்து 'இழும்ம்'மென்று இழுப்பார்கள். சங்க இலக்கியத்தில் அருவிதான் இழும்ம்'மென்று விழும். அப்போது மூக்குப்பொடி இல்லையல்லவா? ஆகவேதான் மூக்குப்பொடியை
இழுப்பதற்கு அதனைச் சங்ககாலப் புலவர்கள் பயன்படுத்தவில்லை.
ஆரம்பத்தில் மூக்குப்பொடியை இழுப்பது பெரிய இடத்து சமாசாரமாக இருந்தது.
பக்குவமான புகையிலையைப் பக்குவமான முறையில் காயவைத்து, உரலில் போட்டு இடித்துப் பொடியாக்கி, தகுந்த சல்லடைகளால் சலித்து எடுப்பார்கள். வாழைப்பட்டையைக் காயவைத்து pouch எனப்படும் சிறு பைகளாகச் செய்து, அவற்றில் பொடியை வைத்து, வாழை நாறால் கட்டிவிடுவார்கள். இதுதான் 'பொடிமட்டை' எனப்படும். இது
Disposable-ஆன சங்கதி.
ஆகவே நாண்டிஸ்ப்போஸபலாக பொடிடப்பி என்பதை ஏற்படுத்திக் கொண்டார்கள்.
தந்தம், தங்கம், வெள்ளி, பித்தளை, மாட்டுக்கொம்பு, ஆமை ஓடு, காண்டாமிருகக் கொம்பு போன்றவற்றால் செய்யப்பட்ட பொடிடப்பிகள் இருந்தன.
செல்வந்தர்கள், அரசர்கள் போன்றவர்களுக்காக வேலைப்பாடுகள் நிறைந்த விலை மதிப்புள்ள பொடிடப்பிகள் இருந்தன.
Faberge என்பவர் செய்த தங்கப் பொடிடப்பி ஒன்று கடைசியாக விற்பனை செய்யப்பட்டபோது ஏழு லட்சம் பவுன் ஸ்டெர்லிங்கு வாங்கப்பட்டது. இது அப்போதைய நாணயமாற்று விகிதத்துக்கு பதினேழு லட்சத்து ஐம்பதினாயிரம் யூஎஸ் டாலர்கள். கிட்டத்தட்ட இரண்டு மில்லியன்.
சமீபத்தில் பெப்ஸிக்கோலாவுக்கும் கொக்காக்கோலாவுக்கும் இடையே பெரிய போட்டாபோட்டியே நடந்தது. அதனை
'Cola Wars' என்று சொல்வார்கள்.
அந்தப் போட்டியையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிடும் அளவுக்குத் தமிழ்நாட்டில் பொடிப் போட்டி நடந்திருக்கிறது.
யாருடைய பொடி, காரம் மணம் குணம் ஆகிய முக்குணங்களும் கொண்டவை என்பதைக் குறித்தே ஏற்பட்ட போட்டி.
புகையிலை தமிழகத்தில் சிறப்பிடத்தைப் பிடித்துக்கொண்டது.
திருப்பதி வேங்கடாசலபதி தன்னுடைய வலது கரத்தால்(அபயக் கரம்) இவ்வளவு அகலமும் நீளமும் உள்ள புகையிலையைப் போடுமாறு உபதேசிப்பதாகவும், தட்சிணாமூர்த்தி தம்முடைய வலக்கரத்தால் (சின்முத்திரை) காரம் மணம் குணம் நிறைந்த குறிப்பிட்ட பொடியைப் போடுமாறு உபதேசிப்பதாகவும் சொன்னார்கள்.
இன்னும் ஒரு படி மேலே போய்விட்டார்கள்.
பொடிப்பாட்டு:
பழனி மாம்பழக் கவிச்சிங்க நாவலர் கண்களை இழந்தவர். சிரமப்பட்டு தமிழ் கற்று மிக வேகமாகக் கவி பாடினார். வேறு யாராலும் இயற்றமுடியாத பாடல்களையெல்லாம் இயற்றியிருக்கிறார். இவர் ஓர் ஏகச்சந்தக் கிராஹி.
இவருடைய வரலாற்றை என்னுடைய ஸ்கந்தாவெப்
http://www.skandaweb.com அப்போதிருந்த இராமநாதபுரத்து சேதுபதி மன்னராகிய முத்துராமலிங்க சேதுபதியும் அவருடைய அண்ணனும் ஸமஸ்தான நிர்வாகியுமான பொன்னுச்சாமித் தேவரும் மிகுந்த அன்பு வைத்திருந்தார்கள். ஆகவே பல சமயங்களில் உரிமையுடன் விளையாட்டாக ஏதாவது செய்வார்கள்.
ஒருமுறை மாம்பழத்துடைய பொடிடப்பியை பொன்னுச்சாமி தேவர் ஒளித்துவைத்துவிட்டார்.
தேவர் அப்போது கவிராயரை ஒரு முக்கிய விஷயத்தைப் பற்றி தமது அவையில் உரையாற்றுமாறு சொல்லியிருந்தார்.
மாம்பழம் பேசுவதற்கு ஆயத்தமானார். அதே சமயம் இடுப்பில் தடவிக் கொண்டிருந்தார்.
சொற்பொழிவு ஆரம்பாகியது.
கவிராயர் இன்னும் எதையோ தடவிப்பார்த்தவாறு இருந்தார்.
சொற்பொழிவு நடந்துகொண்டிருந்தது. ஆனால் தடவுதல் நிற்கவில்லை.
அப்போது தேவர், அவரிடம், "புலவரே, ஏதோ மும்முரமாகத் தேடுகிறீர் போலும்?"
கவிராயர்:"அது ஒன்றும் பெரிய சமாச்சாரமில்லை. சின்ன விஷயந்தான்".
தேவர்: "அப்படியானால் அது 'பொடி விஷயம்' போலும்?"
கவிராயர்: "ஆமாம்".
தேவர்: "தாங்கள் காணாமல் போக்குவித்த பொருள் வேண்டுமானால் 'பொடி' என்னும் சொல்லை ஐந்து இடங்களில் வருமாறு அமைத்து முருகனின்பேரில் ஒரு வெண்பாவை இப்போதே பாடவேண்டும்".
கவிராயர்:
"கரும்பொடி மாவஞ்சவெறி கைப்பொடிசில் வெற்பர்
தருங்கொம் பொடிசைதெய்வத் தையல்- விரும்புபுய
வான்பொடியா நின்றகதிர் மானுமயி லோயெனையாள்
தேன்பொடியார் பூப்பந்தந்தந் தே"
கரும்பு ஒடி மா அஞ்ச எறி கைப்பு ஒடிசில் வெற்பர்
தரும் கொம்பொடு இசை தெய்வத்தையல்; விரும்புபுய,
வான்பொடியா நின்ற கதிர்மானும் அயிலோ எனையாள்
தேன்பொடியார் பூப்பந்தந்தந்தே!
கரும்பை ஒடிக்கும் யானையை விரட்ட வன்மையான கவண்களை
வைத்திருக்கும் மலையர்கள் தரும் கொம்பாகிய வள்ளியுடன்
இசைந்த தெய்வயானையும் விரும்பும் புயங்களையுடையவன்.
அதற்கு மேல் உள்ள பொருள் சரியாகப் பிடிபடவில்லை. யாராவது சொல்லுங்கள்.